<p><b>தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவிடம் ஒருநபர் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.</b></p><p>தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;</p><p>ஏற்கனவே நடந்த 34 கட்ட விசாரணையில் 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது.</p><p>இதில் ஆஜராக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சரத்கர், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் மற்றும் உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.&nbsp;</p><p>இதில் அப்போதைய நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், தற்போதைய சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனருமான கபில்குமார் சரத்கர் நேற்று ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.</p><p>இதனையடுத்து, இன்று ( ஜனவரி 25 ) அப்போதைய தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்தவரும் , தற்போதைய காவல்துறை நலன் கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நேரில் ஆஜராகி உள்ளார்.</p>