<div align="left"><p dir="ltr"><span style="font-size: 16px;"><b>கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் விதிமுறையை மீறி உரம் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது.</b></span><br></p></div><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இதுகுறித்து <b>தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</b></span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் சுமார் 1.60 லட்சம் எக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்து பயிர்களும், சுமார் 20 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல், வாழை போன்ற இரவை பயிர்களும் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த பயிர்களுக்கு தற்போது அடியுரம் மற்றும் மேலுரம் இடவேண்டிய பருவத்தில் உள்ளதால் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களிலும் தனியார் உரக்கடைகளிலும் உரங்ளை வாங்கி பயிர்களுக்கு உரமிடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இந்த நிலையில் தனியார் உரக்கடைகளில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இணை பொருட்களை உரங்களுடன் சேர்த்து வாங்க கட்டாயப்படுத்துவதாகவும் விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற புகார்களைதொடர்ந்து விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட கலெக்டரால் தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு, அனைத்து உரக்கடைகளிலும் ஒட்டப்பட்டன.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இந்த புகார் எண்களில் பெறப்பட்ட புகார்களை விசாரித்து தவறு செய்த 5 உரக்கடைகளை பூட்டி `சீல்' வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">அதனை தொடர்ந்து கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், பேய்குளம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் விதிகளை மீறிய 5 உரக்கடைகள் மூடப்பட்டு `சீல்' வைக்கப்பட்டு உள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி வேளாண்மைத்துறை, வருவாய்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கொண்டு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">தற்போது பொட்டாஷ் உரம் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.660 உயர்ந்து புது விலையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.1,700 என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் பொட்டாஷ் உரம் வாங்கும்போது மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையான, பழைய பொட்டாஷ் உரம் மூடை ஒன்றுக்கு ரூ.1,040 என்ற விலையிலும், புதிய பொட்டாஷ் உரம் மூடை ஒன்றுக்கு ரூ.1,700 என்ற விலையிலும் வாங்கிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</span></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">மேலும் உரங்கள் தொடர்பான புகார்களுக்கு தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை </span><span style="font-size:16px" ;=""><a href="tel:04612340678">0461-2340678</a></span><span style="font-size:16px" ;=""> என்ற எண்ணிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனரை (தரக்கட்டுப்பாடு) </span><span style="font-size:16px" ;=""><a href="tel:9655429829">96554 29829</a></span><span style="font-size:16px" ;=""> என்ற எண்ணிலோ அல்லது அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலோ புகார் அளிக்கலாம்.</span><span style="font-size:16px" ;=""> </span><span style="font-size:16px" ;="">இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</span></p>