<p dir="ltr"><b>தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.</b><br></p><div align="left"><p dir="ltr">தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 13-ந் தேதி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டசபை அரங்கத்தில் அன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.</p></div><div align="left"><p dir="ltr">பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், என்னென்ன அலுவல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யும்.</p></div><div align="left"><p dir="ltr">ஆனால் இந்த முறை சட்டசபை தொடங்குவதற்கு முன்பே அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்படுகிறது. அதன்படி, இன்று 10-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.</p> <p dir="ltr">அதில், ஆகஸ்ட் 13 இல் தொடங்கும் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 வரை நடக்கிறது. வரும் 13ஆம் தேதி பொது பட்ஜெட் ,14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.</p></div><div align="left"><p dir="ltr"> தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.</p></div>