<p><b>ஓட்டப்பிடாரம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 675 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரரை போலீசார் தேடிவருகின்றனர்.</b><br></p><p>ஓட்டப்பிடாரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக&nbsp; போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் எபனேசர் தலைமையில் காவலர்கள் சங்கரலிங்கம், விசு ஆகியோர் பாஞ்சலாங்குறிச்சி சாலையில் ஏ.கே.எஸ்.நகர் விலக்கு பேறுந்து நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p>அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த லாரியை நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அந்த மினி லாரியை சோதனையிட்டனர். சோதனையில் மினிலாரியில் 25 கிலோ எடை கொண்ட 27 மூட்டைகளில் 675 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது.&nbsp; இதையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.&nbsp;</p><p>விசாரணையில்,&nbsp; இந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது, புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன் என தெரிய வந்தது. மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தூத்துக்குடி தமிழ்நாடு உணவுப் பொருள் கழகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணனை போலீசார் தேடிவருகின்றனர்</p><p><br></p>